காடு இட்டுச் செல்லும் பாதை
![காடு [Kaadu] by Jeyamohan | Goodreads](https://images-na.ssl-images-amazon.com/images/S/compressed.photo.goodreads.com/books/1311334291i/10236513.jpg)
அப்போது விகடனில் தொடராக வந்துகொண்டிருந்த சங்க சித்திரங்கள் படித்து, அதனை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்த காலங்கள். வார நாட்களில் மேன்ஷனிலிருந்த அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு, யாரோ துணி துவைக்கும் சத்தத்தையும், ஒளிரும் மின்சாரக் கம்பியில் அமர்ந்து கரைந்து செல்லும் காகத்தின் குரலையும் கேட்டுத் தாளமுடியாமல் இருந்த நாட்கள்.
அன்றைய மன நிலையில் யாரேனும் காடு பற்றிக் கேட்டிருந்தால், அவை கரிய இருட்டில் மரங்கள் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ஒரு பாதை மட்டுமாகவே இருந்திருக்கக்கூடும். ஆழ்கிணறுக்குள் செல்லும் ஒரு சரடு போல. அதன் மறு முனையைக் கற்பனை செய்ய முயலும் தோறும், மூச்சடைத்து நீருக்குள்ளிருந்து வெளிவருவதுபோல இருக்கும். எதிர்கால பயம், தனிமை, பதற்றம் என மனதுக்குள் பொங்கி வந்த வண்ணம் இருந்த ஒன்றின் படிமமாகவே காட்டை கற்பனை செய்திருப்பேன். அப்படி இருந்த நாட்களின் ஒன்றில் தான் காடு நாவல் வெளிவந்தது. கிரிதரனை மிக எளிதாகவே அடையாளம் கொண்டுகொள்ள முடிந்தது. அவன் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும்போதும் என் அகமும் அவனின் கைபிடித்துக் கொண்டு இருளுக்குள் நுழைந்தது. அவன் காட்டில் கண்ட பூக்களையும், தாமிர தகடு போன்ற இலைகள் கொண்டு, இரு கால்கள் நீட்டியது போலப் புடைத்திருக்கும் வேர்கள் கொண்ட மரணத்தினை பார்க்க முடிந்தது. பூச்சிகள், உண்ணிகள் அடர்ந்த மிளாவை அவன் காட்டுக்குள் கண்டபோது அதன் வாசனையை நுகரமுடிந்தது. காட்டில் அவனுடன் பலாவை ருசிக்கமுடிந்தது, யானையின் பிளிறலைக் கேட்க முடிந்தது, நீலியின் மீதான அவன் காதலின் தீண்டலை உணரமுடிந்தது. இப்படி காடு படிக்கும் கணம் தோறும் புலன்களில் ஏறி டீசல் வாசனையில் மோகம் கொண்ட யானை போல மனம் சொல்லவே முடியாத ஒன்றில் நிலைத்திருந்தது. எங்குச் சென்றாலும் அவ்வாசனையை நுகர்ந்துகொண்டே இருந்த நாட்கள் அவைகள்.
"வறனுறல் அறியாச் சோலை.." என்ற குறிஞ்சியை ஜெ கபிலருடன் சேர்ந்து பெருங் களியாட்டத்தை நிகழ்த்தியிருப்பார். "சினைதொரும் தீம்பழம்.." , "நின்றுகொய மலரும்.." என எங்குக் கண்டாலும் காடு நாவல் தான் நினைவுக்கு வரும். இந்நாவலில் ஜெ சொல்லியிருப்பது போல "ஒரு அனுபவம் அது முடிந்த பிறகு சாதாரணமாகி விடுகிறது. ஆனால் அது நிகழும் கணங்களில் அப்படியே முழுப்பிரக்ஞையையும் சுழற்றியடிக்கும் பிரவாகமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கிறது" என்பது காடு நாவலைப் படிக்கும் எவரும் கடந்துவந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்த முழுப்பிரவாகத்தை காடு நாவலை வாசிக்கும் போது அடைய சரியான பருவம் ஒன்றிருக்கிறது என்றே எண்ணுகிறேன். அந்த பருவம் தாண்டியபின் ரசிக்கலாம். அந்த நிகர் வாழ்வை வாழமுடியாது என்று இப்போது தோன்றுகிறது. "பொழுது இடை தெரியின் பொய்யே காமம்" என்பதை வாழமுடிந்தால் நல்லது. இருபது வருடம் கழித்து அந்த அனுபவத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் அது பெரும் திறப்பாக இருக்கிறது. தனி மரம் ஒன்றைக் கூட காடெனக் கற்பனை செய்துகொண்டு ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. வாழ்வை இருத்தி ரசிக்கச் செய்தது. அன்று தெரிந்த அந்த பாதை வழியே ஜெ இட்டுச் சென்றது இலக்கியத்தை நோக்கியே...
Comments
Post a Comment