இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்


நான் பயணக் கட்டுரைகள் படித்தது குறைவு. அக்குறுகிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டது, பெரும்பாலான பயண கட்டுரைகள் அப்பயணத்தின் ஊடேயிருந்த இடங்களை அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களுடன் நம்மை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தி அனுபவிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தாவி வேறு ஒரு இடத்தை பற்றிப் பேசி செல்பவையாக இருக்கும். அது ஒரு விதத்தில் தகவல்களை அள்ளி தருபவையாக இருந்தாலும், பயணத்தின் தொடர் அனுபவத்தைத் தவறவிடுகிறது. படிப்பவர்களைப் பயணத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகிறது. எந்த விதத்திலும் அது படிப்பவர்களையும் அப்பயணத்தை மேற்கொள்ளத் தூண்டி விடக்கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கான சரியான காரணம் தெரிவில்லையென்றாலும், அப்பயணக் கட்டுரைகளை எழுதுவதற்காகவே அப்பயணங்கள் செய்யப்படுவதாக இருப்பதால் பயணங்களின் அனுபவத்தைக் கடத்த தவறவிட்டு வெறும் தகவல் களஞ்சியமாக மாறிவிடுகிறது என்று எண்ணுகிறேன். மனம் திளைக்கப் பயணத்தை அனுபவித்துவிட்டு அதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வரும்போது எழுதப்படுபவை அந்த அனுபவத்தையும் அவர்கள் அறியாமலேயே எழுத்தில் கடத்திவிடுகிறார்கள். ஜெவின் "அருகர்களின் பாதை" அப்படி ஒரு அனுபவத்தை என்னுள் முதல் முறையாகக் கடத்தியது. அதற்குப் பிறகு நண்பர் விசுவின் இந்த பயணக் கட்டுரை இரு கடல் ஒரு நிலம் அவ்வாறு அமைந்திருக்கிறது. முன் தீர்மானமாக அவர் எதையும் திட்டமிடாமல் பின்பு ஒவ்வொன்றாக மனதுக்குள் அசைபோட்டு அவர் அடைந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். 
 

இரு கடல் ஒரு நிலம் என்ற தலைப்பிலிருந்தே, நிலக்காட்சிகளின் மீதான அவரின் மனம் இயங்குவதைச் சொல்லிவிடுகிறது. ஒரு புள்ளியில் சந்தித்த கடலை நேர் எதிரில் இருக்கும் மற்றொரு புள்ளிக்குச் சென்று அதே கடலை சந்திப்பது தான் இந்த பயணம். அறையின் ஒரு பக்க கதவு வழியாக வந்து புன்னகை செய்துவிட்டு, வேறொரு கதவின் வழியாக அதே அறையை வந்தடைந்து திகைத்துப் புன்னகை செய்துவிட்டுச் செல்லும் சிறுவனைப் போல இப்பயணத்தைச் செய்திருக்கிறார். ஒரு பயணம் என்ன தரும்? புதிய காட்சிகள். அக்காட்சிகள் நம் உணர்வுநிலை தளத்தில் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகள். அப்பாதிப்புகள் நம் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமான பார்வையைக் கொடுத்தல். சிக்கல்கள், துன்பங்கள், இன்பங்கள் என நாம் பிரித்துவைத்திருக்கும் உணர்வுகளின் மீதான புரிதல்கள் என ஒன்றைக் கொடுக்கிறது. இந்த புரிதல்கள் சிறிது சிறிதாக ஒவ்வொரு பயணத்தின் போதும் வளர்ச்சியடைந்துகொண்டேயிருக்கிறது. பார்த்த ஒரு இடத்தையே இந்த அனுபவத்தின் கூட்டோடு மீண்டும் பார்க்கும்போது அது மேலும் தெளிவைக்கொடுக்கிறது. நண்பர் விசுவும் இந்த பயணத்தில் அவர் பார்த்த பல இடங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறார். ஆனாலும் இந்த பயணத்தில் அவர் கண்டடைந்தது அவரை வேறு ஒரு புள்ளிக்குக் கடத்திருப்பதைக் காட்டுகிறது. அதுவும் அவரின் ஆசானுடன் அந்த பயணம் செய்து அதனை அடைந்திருப்பது அவரின் நல்லூழ். 

இக்கட்டுரைகள் அவரின் சிறுவயதிலிருந்து அவருக்குத் தன்னளவில் அடைந்த அனுபவங்களையும், புதிர்களையும் இணைத்து அதன் விடை தேடலாக ஒவ்வொரு கட்டுரையையும் அமைந்திருப்பது சிறப்பாக வந்திருக்கிறது. இப்பயணம் அவருக்குள் ஆழ்மனதிலிருந்ததை கிளறி வெளிக்கொணர்ந்திருக்கிறது. இது சரியாகத் திட்டமிட்டு எழுதும்போது நிகழாத ஒன்று. அந்த தன்மையே படிக்கும் மற்றவர்களுக்கும் மிக எளிதாக தம்மை இணைத்துக்கொள்ள முடிகிறது என்று எண்ணுகிறேன். அதிலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர் பள்ளிப் பருவத்தில் அடைந்தவையும், நண்பர்களும், சுஜாதாவிலிருந்து ஜெவை கண்டுகொண்டதும் எனப் பல விஷயங்கள் ஒத்துப்போனது இக்கட்டுரையைப் படிக்க வேறு ஒரு காரணமாக அமைந்து ஒரு உந்துதலாக இருந்தது.  தகவல்களைக் கட்டுரையிலிருந்து விலகி செல்லாமல் சுவாரசியமாகத் தேவையான அளவுக்கு மட்டுமே இணைத்திருக்கிறார். இணையத்திலிருந்து மேலதிகமான தகவல்களை எடுத்துச் சிதறவிடாமல், அவர் அமெரிக்க வந்ததிலிருந்து இயல்பாகவே ஆர்வத்துடன் தெரிந்துவைத்திருப்பதை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார். அது அவரின் தனிப்பட்ட இயல்பைக் காட்டுகிறது. 

ஆரவாரமும் கொண்டாட்டமுமிக்க நியூயார்க் நகரிலிருந்து கிளம்பித் தியானித்து நிற்கும் மலைகளும் அமைதியின் பேரோசைகள் நிறைந்த பள்ளத்தாக்குகளும் கடந்து முடிவில்லா கடலை வந்தடைந்த ஒருவரின் மன நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். சில தினங்களில் வாழ்க்கையைக் குறுக்கு வெட்டாகக் கடந்து வந்து வெற்றியையும் தோல்வியையும் சலனமில்லாமல் ஒன்றே போல ஏற்கும் ஒரு மனநிலையை அடைந்திருக்கும். க்ராண்ட் கேன்யன் கட்டுரையிலிருந்த உச்சக்கரமான அழகியல் வர்ணனைகள், அவரின் லாஸ் வேகாஸ் பற்றிய கட்டுரையில் இல்லாமல் இருப்பது அதை நிரூபிக்கிறது. 

இப்பயணத்தின் போது நண்பர் விசுவுக்கு நெருக்கமாக அவருடனே பயணித்தது நீலமும் கருமையும் கொண்ட வானம் என்று சொல்லலாம். பல்வேறு இடங்களில் அவர் வானத்தை, நட்சத்திரங்களை அண்ணாந்து ஒரு முறை பார்த்துக்கொள்கிறார். அதனுடன் ஏதோ உரையாடுவது போல அல்லது அதன் இருப்பை உணர்ந்துகொள்வதுபோல. அது ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரிப்பது போல ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறது. 

பயண மனநிலையில் ஆசானிடம் கேள்விகள் கேட்கவும் தவறவில்லை. பல நல்ல கேள்விகள். எனக்கு பிடித்தமான ஒன்று "கொடை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்ற ஆசானிடம் கேட்டதும் அதற்கு அவர் "விதைக்கு நீரூற்று" என்று ஆரம்பித்து நீண்ட அவரின் பதிலும். 

பயண கட்டுரையின் மற்றொரு முக்கியமான ஒன்று பார்த்ததை அப்படியே எந்த வித அழகியலுமில்லாமல் எழுதுவது. அது படிப்பவரின் கற்பனையைத் தடுத்து பயணத்தின் அனுபவத்தைக் கடத்தமுடியாமல் செய்துவிடும். நண்பர் விசு நல்ல வாசகர் மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராகவும் இருப்பதை இக்கட்டுரையிலிருக்கும் சில இடங்கள், உருவகங்கள் நிரூபிக்கிறது. உதாரணமாக, 

  • "காற்றின் இருப்பை மணலில் விதவிதமாக பதிவு செய்திருப்பதை விவரிக்குமிடம்,
  • "நகரங்களில் பார்க்கும் இரவு சாக்பீஸ் வெண்மை படிந்த பள்ளிக்கூட கரும்பலகை போன்றது"
  • "சர்க்கரை குவியலில் ஏறும் எறும்புபோல, வெண் மணலில் மக்கள் ஏறுவது"
  • "மழையில் ஒழுகிக்கொண்டிருந்த கூரை மொத்தமாக இடிந்ததைப்போல ஓடிப்போய் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதது"

எனப் பல இடங்களில் நல்ல உருவத்துடன் இந்த அழகியலைக் கொண்டுவந்திருக்கிறார். 

ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல பயணத்தை எந்தவித களைப்பும், சலிப்புமில்லாமல் ஏற்படுத்திக்கொடுக்கிறது இந்த பயண கட்டுரை. வாழ்த்துகள் விசு.  


Comments

Popular posts from this blog

உணரும் தருணம்

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்