அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை
அஞ்சலையை நான் பேருந்தில் பயணம் செய்த போது பார்த்திருக்கிறேன். அன்று அவள் சன்னலோரம் தவிப்பாய் அமர்ந்திருந்தாள். எங்கள் வயலில் அறுப்பு நாள் ஒன்றின் போது பார்த்திருக்கிறேன். தலையில் உள்பாவாடை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஆண் சட்டை அணிந்து களத்தில் நெல் அடித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து எங்கள் ஊருக்குப் பயணம் செய்யும் வழியில் முந்திரி மரங்கள் நிறைந்த விருத்தாசலத்தைக் கடக்கும்போது ஒருமுறை பார்த்திருக்கிறேன். சாலையிலிருந்த வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது மஞ்சளும், சிவப்புமாயிருந்த முந்திரிப்பழத்தை இரு கைகளிலும் விரல்களுக்கிடையே லாவகமா நிறுத்தி எங்களை வாங்கச் சொல்லி கண்ணாடியில் முகம் பதித்துச் சென்றாள். சினிமா கொட்டகையில் சீட்டு வாங்கிவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கக் காத்திருக்கும் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்த நரிக்குறவர்கள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு பொங்கி வரும் சிரிப்பை அருகிலிருந்தவனின் தோளில் முகம் புதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். இப்படி நிறைய இடங்களில் அஞ்சலயை கண் சிமிட்டும் ஒரு சில மணித்துளிகளில் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். இந்நாவலில் வாழ்ந்திருக்கும் அஞ்சலயை பார்த்த பின்பு, கண் சிமிட்டும் நேரத்தில் பார்த்து என் அகத்தில் புதைந்திருந்த அத்துணை அஞ்சலைகளும் வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள். நான் பார்த்த அஞ்சலைகள் அனைவரும் இக்கதையில் வாழ்ந்த அஞ்சலைக்கு நிகரான அதே அளவான துயரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கமாட்டார்கள் என்று கூறத் தான் நினைக்கிறேன். ஆனாலும் இக்கதையில் வரும் சமூகமும், ஆண்களின் மன நிலையும், ஆண்டைகளும் என அனைத்தும் நான் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கிற சமூகத்திலிருந்து சிறிதளவும் மாறாமல் இருப்பதால், நான் பார்த்த அஞ்சலைகளும் அதேயளவு வாழ்க்கையை வாழ்ந்திருக்க நிறையவே சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இக்கதையில் வாழ்ந்திருக்கும் அஞ்சலை அழகானவள். பள்ளிக்கூடத்தைவிட வயற்காட்டை ரசிக்கிறவளை இருக்கிறாள். களத்து மேட்டில் தரும் உணவின் ருசியைக் கண்டடைந்து பள்ளிக்கூடத்தை உதறிவிட்டு வயலபரப்பிலும், வயலிலும் நெல் அடிக்கும் களத்திலும் தன் திறமையைக் காட்டுகிறாள். அவளுக்கென இருந்த ஒரே கனவு தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றியது. அவளுக்கு 'மாப்பிளை' என்ற சொன்ன ஒருவனைப் பிடித்துப்போய் வயற்காட்டு வரப்பில், தண்ணி மொள்ளுகிற இடத்தில், பாத்திர விளக்கும் தோட்டத்தில் என எங்கும் அவளின் நினைப்பில் இருக்கிறாள். ஆனால் தாலி கட்டுவது வேறு ஒருவன். தான் மாப்பிள்ளை வீட்டாரால் ஏமாற்றப்பட்டு வேறு ஒரு சோப்லாங்கியை கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள் என்ற துயரத்துடன் மணற்கொள்ளையில் வாழ்கிறாள். அங்கு ஒப்பிட்டியலுடன் பிரச்சனை ஏற்பட்டு மாமனாரால் அடிவாங்கி வீட்டை விட்டு வெளியே செல்பவள் அவளின் மூத்த அக்காவாள் கண்டுபிடிக்கப்பட்டு அவளின் மைத்துனனையே இரண்டாவது திருமணம் செய்து கார்குடலுக்கு வருகிறாள். அங்கு அவள் கணவன் ஏற்கனவே தன அக்காளுடன் குடும்பம் நடத்துவதைத் தெரிந்துகொள்கிறாள். அவள் அக்காவாள் கொடுமைப்படுத்தப்பட்டு ஒரு வேலைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கிறது. பின்பு அங்கும் பிரச்சனை ஏற்பட்டு மீண்டு தன அம்மாவீட்டுக்கு செல்கிறாள். அங்கு தன மகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொண்டவனுடன் குடும்பம் நடத்த மீண்டும் மணல்கொள்ளைக்கே செல்கிறாள். அங்கு அவனுடன் சந்தோசமாக இல்லாவிட்டாலும் அவன் ஒரு துணையாக இருக்கிறான். அங்கு அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கின்றன. சில வருடங்களில் முதல் குழந்தை பெரியவளாகிப் போன பின் தன் தம்பியே திருமணம் செய்துகொள்வான் என்று நினைத்தபோது அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டு அஞ்சலியின் மூத்த அக்காளின் பெண்ணை காசுக்காகத் திருமணம் செய்துகொள்கிறான். பின் அவளின் முதல் குழந்தையும் அவளுடனே வந்து தாங்கிக்கொள்கிறாள். இது அவன் கணவனுக்குப் பிடிக்காமல் போகிறது. இதற்கிடையில் சொத்து பிரச்சனை வந்து ஒப்பிட்டியலுடன் மீண்டும் சண்டை வந்து தன கணவனாலேயே அடிக்கப்பட்டு வாழ்க்கையில் விரக்திகொண்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். பின்பு அவள் குழந்தைகள் அவளைக் காப்பாற்றி அழைத்துவருகின்றன. அவளின் துக்கங்கள் தொடர்ந்து துரத்துகின்றன.
இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை அஞ்சலை மிகத் துயரமான ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் படிக்கும் நமக்கே ஒரு அலுப்பு வந்துவிடுமளவுக்குச் சம்பவங்கள் அவளைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. யதார்த்தத்தில் இது போல நடக்குமா என்ற கேள்வியும் நம் மனதுக்கு வந்து செல்கிறது. யோசித்துப்பார்த்தால் யதார்த்த வாழ்க்கை என்பது ஒற்றைப்படையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நாம் தனிப்பட்ட முறையில் அனுபவித்த இன்பங்களையும் துன்பங்களையும் வைத்து வாழ்க்கைக்கான பொதுவான ஒரு தத்துவ பார்வையை வைப்பதும் அதனைக் கொண்டே சக மனிதனின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு அவர்களை எடைபோடுகிறோம். நமக்கு ஏற்படாதது மற்றவர்களுக்கும் நிகழ்ந்திருக்காது என்ற எண்ணம் அது எவ்வளவு அபத்தமானது. நம்மைக் கடந்து செல்லும் சக மனிதர்களின் நிலையை கிஞ்சித்துக்கும் நினைத்துப்பார்க்கா முடியாதபடி, எங்குச் செல்லும்போதும் "நான்" என்ற ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்லும் இருப்பு எவ்வளவு அர்த்தமற்றது இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
அஞ்சலையின் இவ்வளவு துயரத்திற்கும் அவளும் அவளுடைய தவறான முடிவுகளும் காரணம் இல்லையா? ஏன் அவள் தன கணவனைப் பிரிந்து வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்? என்ற கேள்விகள் இக்கதையில் இயல்பாவாகவே எழுந்து வருகின்றன. ஆனால் இந்த வாழ்க்கையில் நாம் அனைவரும் இந்த சமுதாய விழுமியங்களில் கட்டுண்டு இருக்கிறோம். நம் தனிப்பட்ட முடிவென்பது பெரும்பாலும் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிரொலிப்பாகவே இருக்கிறது. அதன் உந்துதல் தான் அன்ஜலியை ஒவ்வொரு முடிவை நோக்கித் தள்ளுகிறது. அல்லது அன்ஜலையின் அந்த மாதிரியான செயல்களும் முடிவுகளும் இந்த சமுதாயத்தின் நிலையை உணர்ந்துகொள்வதற்கு ஒரு துளியாகவே பார்க்கிறேன். ஒரு மனிதனின் துன்பம் அவனது தனிப்பட்ட பிரச்சனையாக நினைத்துக்கொண்டு அவனைக் கடந்து சென்றது எவ்வளவு முட்டாள்தனமான இருக்கிறது. என் தனிப்பட்ட வாழ்க்கை என்பது எப்படி இந்த சமுதாய அற விழுமியங்களுடன் கட்டுண்டு இருக்கிறது. என் முன்னேற்றம் என்பது என் தனிப்பட்ட முயற்சியல்ல அது எண்ணிலடங்கா நிகழ்வில் கலந்திருந்த அற விழுமியங்களின் வெளிப்பாடே. என் துன்பங்களும் அவ்வாறே.
மேலும் பெண்களைப் பற்றிய புரிதல்களும் அவளின் தேவையும் உணர்வுகளையும் கொஞ்சம் கூட மதிக்காத ஆண்கள் சூழ்ந்திருந்த அந்த சமூக நிலையில் எந்த பெண்ணாக இருந்தாலும் அதையொட்டிய தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயலுவாள். அஞ்சலையின் இந்த வாழ்க்கைக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுயநலமிக்க ஆண் என்ற கர்வம்கொண்ட ஒரு ஆண் இருந்துகொண்டே இருக்கிறான். அது அக்கதையில் மட்டுமில்லை படிக்கும் போது ஒரு ஆணாக இதனைப் புரிந்துகொள்வதற்குச் சற்று நேரம் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு ஆண்களின் மனநிலை உறைந்துபோயுள்ளது என்றே எண்ணுகிறேன்.
Comments
Post a Comment