பொற்குகை ரகசியம் - ஜெகதீஷ்
பொற்குகை ரகசியம் - மெல்லிய உணர்வுகளின் வரைபடம்.
சமீபத்தில் என் மகளின் அறைக்குச் சாயம் அடிக்க அவளுக்கு பிடித்தமான நிறத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தேன். அவள் கொடுத்த அந்த நிறம் முதன்மை நிறங்களான சிவப்பு, நீலம், பச்சை என அல்லாமல் ஏதோ ஒரு நிறத்திலிருந்தது. இவை எப்படியும் கிடைக்கப்போவதில்லை என்று தைரியமாகக் கடைக்குச் சென்று அவரிடம் கொடுத்தவுடன் அவர் ஒரு வாளியை எடுத்து வந்து என் முன் திறந்தார். அதில் வெள்ளை நிறத்தில் சாயம் இருந்தது. அதில், இரண்டு சொட்டுகள் வேறு சில அடர் நிற சாயங்களைச் சேர்த்துவிட்டு ஒரு இயந்திரத்தில் சொருகிக் கலக்கித் திறந்தவுடன், அதில் நான் கேட்ட நிறத்தை ஒத்த சாயம் இருந்தது. பள்ளியில் படித்தது தான். ஆனால் அது தந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது. இந்த நிறத்தின் பெயர் என்ன? இன்னும் இரண்டு சொட்டுகள் அடர் நிறங்களின் சாயத்தைச் சேர்த்திருந்தால் அது வேறு ஒரு வண்ணமாக இருந்திருக்கும். அதன் பெயர் என்ன? இப்படி எண்ணிடலாகப் பெயரில்லா நிறத்தையும் அது ஒவ்வொன்றும் கொடுக்கும் உணர்வையும் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.
அன்றாட வாழ்க்கையில் நாம் அடையும் பல்வேறு உணர்வுகளையும் இந்த முதன்மை நிறத்தினை போலக் கோபம், மகிழ்ச்சி, துன்பம், காமம் என வகைப்படுத்தியே வைக்கிறோம். ஆனால் நிஜத்தில் பெயரில்லாத அந்த நிறம்போல இரு வேறுபட்ட முதன்மை உணர்வுகளுக்கு இடையே ஏதோ ஒரு மெல்லிய உணர்வைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறோம். மாலை வெயிலில் மினுமினுக்கும் இலைகளுடன் இருக்கும் மரத்தைப் பார்க்கும்போது அடையும் உணர்வுக்கு என்ன பெயர்? அதே துல்லிய உணர்வை எப்படி மீண்டும் அடைவது? ஜெகதீஷ் அவர்களின் "பொற்குகை ரகசியம்" தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் அடர் நிற சாயம் போல இருந்து, ஒரு துளி நம்மில் கலந்து, இன்னெதென்று சொல்ல முடியாத அந்த மெல்லிய உணர்வை அடைய வைக்கிறது. வானொலியில் குமிழைத் திருகிக் குறிப்பிட்ட நிலையத்தை அடையவைப்பது போல, இக்கதைகள் மெல்ல நம்மை அந்த மெல்லிய உணர்வை அடையவைக்கிறது. அந்த உணர்வுகளுக்கும் பெயர்கள் இல்லை தான். வேண்டுமென்றால் நம் உணர்வு பயத்துக்கும் சந்தோஷத்துக்கு இடையே இருக்கும் போது "நீலத்தழல்" என்று அழைக்கலாம். காமத்துக்கும் காதலுக்கும் இடையே நின்று தவித்து நிற்கும் போது "ஊனுடல்" எனலாம். குற்றவுணர்வுக்கும் பெருந்தன்மைக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் தருணத்தை "பேராசிரியரின் கிளி" எனலாம். அவருக்கு ஏற்பட்ட அந்த மெல்லிய உணர்வை இனம்கண்டுகொண்டு இக்கதைகளின் மூலமாக ரகசியமாக நம்முள் பொதிந்திருக்கும் அந்த பெயரில்லா உணர்வை அடைய உதவும் வரைபடம் ஒன்றினை கொடுக்கிறார்.
ஜெகதீஷின் சிறுகதைகளை தனித்தனியாக அவைகள் வெளிவந்த தருணத்தில் படித்திருக்கிறேன். இப்படித் தொகுப்பாகப் படிக்கும் போது, அது வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கிறது. பெரும்பாலான சிறுகதைகள் அவர் கடந்து வந்த பயணத்தின் ஊடே வெவ்வேறு தளங்களில் அவர் கண்டுகொண்ட முரண்களையும், கற்றுகொண்டவைகளையும் வைத்து கற்பனைகளின் வழியே சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அக்கதைகள் வழியே அவரின் இலக்கிய சிறுகதைகளின் புரிதலின் படிநிலைகளில் ஏற்படும் மாற்றத்தையும் காண முடிகிறது. வெளிப்படையாகச் சொல்வதிலிருந்து தொடங்கி படிமங்களின் வழியே சொல்வதை கடந்து தத்துவங்களில் வந்தடைந்திருக்கிறார் என்பதாக எண்ணுகிறேன். எல்லா பெரிய எழுத்தாளரும் கடந்து வரும் பாதையும் அதுவே. கதையின் மையத்தை முடிவு செய்து கற்பனைகளின் வழியே எழுதுவதும், அருவமான புலப்படாத ஒன்றை எழுதிக்கொண்டே அதன் மையத்தை அடைவதும் அதற்குரிய தளத்தினை அடைகிறது. இத்தொகுப்பில் "நீலத்தழல்" அப்படி சரியாக முன்னேற்பாடாக முடிவு செய்யப்படாமல் எழுதியதாக இருக்கவேண்டும். அதில் இருக்கும் அனுபவ ரீதியான அழகான உருவகங்களை வேறு சிறுகதைகளில் காண முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பைப் பார்க்கும்போது சிறுகதைகளிடையே ஒரு தொடர்பைக் கண்டுகொள்ளமுடிகிறது. ஒத்த இயல்புகளின் தாவல் இருக்கிறது. அப்படி இயல்புகளின் சாயல்கள் இல்லாமல் முற்றிலும் வேறு ஒன்றாக இருப்பது "பேராசிரியரின் கிளி" என்றே எண்ணுகிறேன். அதில் வரும் கதாப்பாத்திர்கள் முற்றிலும் வேறு. உறவு முறைகளற்று யாரோ வேறு எங்கோ நடக்கிறது. அது ஒரு அந்நியத்தன்மையைக் கொடுத்து அதன் வழியே இரு வேறு உணர்வுகளின் நியாய தர்க்கங்களைக் கொடுத்து வாசகனைப் படித்தபின்னும் யோசிக்க வைத்து நெருக்கமாக்குகிறது. நாணயம் பல்வேறு காட்சிகளின் மீறலுக்குள் ஒளிந்திருக்கும் படிமத்துடனான நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள் ஜெகதீஷ்.
Comments
Post a Comment