கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - ரசனையுரை
அசோகமித்திரன் அவரின் சினிமா துறை சார்ந்த அனுபவங்களை வைத்து ஒரு குறுநாவலாக எழுதியுள்ளார். கதை என்பது என்று ஏதும் இல்லாமல் நிகழ்வுகளை அதன் நுணுக்கத்துடன் மிகையுணர்ச்சி ஏதுமில்லாமல் அவர் எழுதும் சிறுகதையை போலவே இந்நாவல் அமைந்துள்ளது. பொதுவாக அவரின் கதையில் நிகழும் நிகழ்வுகள் படிக்கும்போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வேறு ஏதோ ஒரு பொழுதில் சட்டென நம்மை நிறுத்தி அதனை சிந்திக்க வைத்து அந்நிகழ்வு மெல்ல நம்முள் விரிவடைந்து விரிவடைந்து அதில் இருக்கும் ஒரு ஆழமான வாழ்க்கையின் ஒரு உண்மையை கண்டடைய வைக்கும் அந்த உணர்வு இந்நாவலிலும் ஏற்படுகிறது. இந்நாவலில் முதல் அத்தியாயத்திலேயே கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். பின்பு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முதல் அத்தியாயத்தில் வந்த வெவேறு கதாப்பாத்திரத்தின் வழியே காலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு தாவி சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புள்ளியிலும் மனிதர்கள் அடைந்த ஏற்றமும் இறக்கமும் போகிறபோக்கில் மிகையில்லாமல் அது தான் யதார்த்த்தம் என்பது போல சொல்லி செல்கிறது. அது காட்டும் வாழ்க்கையின் சித்திரம் நம்பமுடியாத ஒரு தந்திரம் போல ஒரு ஆச்சிரியத்தையும், பெரும் உணர்ச்சி கொந்தளிப்பையும் ஒரு சேர கொடுத்து செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியான ஒருவரின் அந்த பொழுதின் நிகழ்வுகளை சொல்லி செல்லும் இந்நாவலை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களின் சொல்லப்படாத வாழ்க்கையின் பல பக்கங்களை கண்டுகொண்டு வலிகளுடன் கடந்து வந்ததுபோல இருக்கிறது. இவ்வளவிதான அல்லது இதற்குத்தானா இத்தனையும் என்ற கேள்வி சினிமாவின் கடைக்கோடியில் ஒருவனின் வாழ்விலிருந்து கிடைக்கும் அந்த ஞானம் அதே துறையில் உச்சத்தில் பெரும் செல்வந்தரின் ஒருவரின் வழக்கியிலும் கிடைக்க வைக்கிறது.
ஒன்றுகூடி ஒரு திரைப்படத்திற்க்காக கடுமையாக உழைக்கும் ஒரு பெரும் கூட்டம் அப்படியே பிரிந்து வேறு ஒரு குழுவில் வேலை செய்கிறது. முன்னர் இருந்த இருந்த குழுவுடன் எந்தவித தொடர்பும் அற்றதாக மாறிவிடுகிறது. தன்னுடனே இருந்த ஒருவனின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் எண்ணம் ஏதுமில்லை. அதற்க்கு நேரமில்லை அவர்களித்தில். ஒரு திரைப்படத்தை வெற்றி படமாக்க திரைக்கதைக்கு தேவையான அத்துணை சூத்திரங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு எனோ தன சொந்த வீட்டில் இருப்பவர்களை அரவணைத்து சரியான பாதையில் செலுத்த தெரியவில்லை அல்லது நேரமில்லை. பழைய சேலைகளை கீழ் விரித்து ஒரு சிறு அறையில் வாழும் குடும்பத்தை கொண்ட திரைப்பட மேனேஜர் தான் நடிகரிலிருந்து வாகனம் ஓட்டுநர் வரை எல்லோருக்கும் பணம் பட்டுவாடா செய்கிறார்.நடிகர் நடிகையிலிருந்து கார் ஓட்டுபவன் வரை அனைவருக்கும் கூலி கொடுக்கும் மேனேஜர் நடராஜன் தன மனைவியிடம் மூன்று குழந்தைகள் மற்றும் அவன் அம்மாவுடன் அன்றைய தினத்தை கழிக்க ஒரு ரூபாய் கொடுத்து விட்டு செல்கிறான். தன் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார். இந்த விசுவாசமும் அவரின் நேர்மையும் இறுதியில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கவைக்கிறது. யதார்த்த வாழ்வில் இருக்கும் இந்த முரண் இதுதான் வாழ்க்கிய என்று கடந்துசெல்ல முடியவில்லை. அவரை நம்பியிருட்ந்த அவரின் மனைவியும் மூன்று குழந்தைகளும் வயதான அவரின் அம்மாவும் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி அதன் ஊடே வந்து செல்கிறது.
சினிமா துறையில் படத்திற்கு கிடைக்கும் புகழின் அளவை பொறுத்து அதில் வேலை செய்த அத்துணை பேரின் வாழ்வும் அமைகிறது என்பதை நினைக்கும் பொது, தோல்வியடைந்த படங்களின் எண்ணிக்கை பெரும் அச்சத்தை மூட்டுகிறது. உழைப்பு மட்டும் போதாதா இந்த சினிமாவில் சொல்ல முடியாத அல்லது கணிக்க முடியாத எதோ ஒன்று இருக்கிறது. அதற்கு அதிர்ஷ்ட்டம் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த அதிர்ஷ்ட்டம் கொடூரமான ஒன்று. காற்றுபோல கீழே கிடப்பவர்களை உச்சத்திற்கு அழைத்து சென்று சட்டென கீழே இறக்கி நடுரோட்டில் கிடைக்கும் காய்ந்த சாணி போல கேப்பாடற்று கிடத்தி சென்றுவிடுகிறது. முரணாக அந்த அதிர்ஷ்ட்டத்திற்க்காக என்னவேண்டுமென்றாலும் செகிறார்கள். நம்பிக்கை இல்லாவிட்டாலும் வந்துவிட்டால் ராகுகாலம் பார்க்கிறார்கள்.
கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கார், சிகரெட், சாப்பாடு கேரியர் இவைகளே சினிமாவில் இருக்கும் மனிதர்களை இணைப்பதற்கும், சமரசம் செய்வதற்கும், மனிதனாக ஒருவரை மதிப்பதற்கும் ஒரு கருவியாக இருக்கிறது.
Comments
Post a Comment