அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை
திரு. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நாவலோ அல்லது சிறுகதைகளோ இதற்கு முன் படித்ததில்லை. அவரின் 'மோகமுள்' நாவலைப் பற்றிப் பரவலாக இலக்கிய உலகில் பலர் பேசி விமர்சித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அம்மா வந்தாள்" என்ற நாவலைப் பற்றியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "நல்ல நாவல். படிக்கவேண்டும்" என்பதைத் தவிரப் பிற ஒன்றும் நினைவில் இப்போது இல்லை. எது இந்த நாவலை வாங்கத் தூண்டியது என்று இப்போது சரியாக நினைவில்லை. வாங்கி என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்ற வரிசையிலிருந்தது.
இந்நாவலில் வரும் கதைப்பின்னணி கும்பகோணத்தில் பிறந்த எனக்கு மிக நெருக்கமான ஒன்றுதான். பள்ளிக்குச் செல்லும் போது காவேரி ஆற்றைக் கடந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் வேத பாட சாலை ஒன்று இருக்கும். அதன் பெரிய சுவருக்குப் பின்னால் பல சிறுவர்களும் என் வயதொத்த இளைஞர்களும் வேதங்களை வாய் விட்டுப் படித்து மனனம் செய்து கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அதைக் கடக்கும் போது அவர்கள் வாய்விட்டு வேதங்களைச் சொல்வது என் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய அனைவரும் அமர்ந்து ஒரே குரலில் சொல்வது நினைவுக்கு வரும். தூக்கிக் கட்டிய சற்று பழுப்பான வேஷ்டியும் இடுப்பில் ஒரு ஈரிழை துண்டும், பூணூல் அணிந்த வெற்று உடம்பில் பட்டை பட்டையாக விபூதிகளும், அரைவெட்டில் சிறு குடுமியும் கொண்டு அழகான கள்ளமில்லாத சிரிப்புடன் எப்போதாவது வெளியே நிற்கும் சிறுவர்களின் நினைவு இப்போது ஆழ்மனதிலிருந்து வருகிறது எனக்கு ஆசிரியமாகவே இருக்கிறது. பொதுவான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு அவர்கள் ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. இத்தனைக்கும் என் நெருங்கிய நண்பர்கள் பலர் பிராமணர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் கூட அவ்வேதம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியைப் பற்றிப் பேசியது நினைவில்லை. பேசியிருக்கலாம். ஆனால் அவைகள் அச்சிறுவர்கள் பற்றி ஒரு அரசியல் சார்பு கொண்டு இருந்திருக்கலாம். அப்பள்ளிகள் ஒரு மேல் வர்க்கத்தைச் சேர்ந்தது போன்ற ஒரு உணர்வு இருந்திருக்கலாம். இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை.யாருக்கும் புரியாத ஒன்றை அவர்கள் படிக்கிறார்கள் என்றளவில் மட்டும் ஒரு எண்ணம் இருந்தது. அந்த நினைவுகள் மட்டுமில்லாது என் நண்பர்கள் என் கிராமத்திலிருந்த அக்ரஹாரம் எனப் பிராமண சமூகத்திலிருந்த நண்பர்கள் பலருடைய வீட்டில் உணவு அருந்தியும் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கிறேன். அதனால் இந்த நாவலில் வரும் வீடுகளும் கதாபாத்திரங்களை என்னால் எளிதில் கற்பனை மூலம் அடையமுடிகிறது.
இந்நாவலில் வரும் அப்பு காவேரி கரையோரம் சித்தன் குளம் என்ற கிராமத்தில் பவானியம்மாள் நடத்தி வரும் வேத பாடசாலையில் பதினாறு வருடங்களாக அங்குத் தங்கிப் படிக்கிறான். வேதத்தில் கரைசேர்ந்தவனாகப் பல பரிசுகள் பெற்று வேதத்தில் தன் திறமையை உறுதிசெய்துகொள்கிறான். அவனின் திறமையும் இயல்பும் பவானியம்மாள் வீட்டுடன் நெருக்கத்தைக் கொடுக்கிறது. அப்புவுக்கு பவானியம்மாளின் கருணையால் தான் தனக்கு இந்த வேதம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதால் பவானியம்மாளை மற்றொரு தாயாகப் பார்க்கிறான். பவானியம்மாளுக்கும் அவனின் மீது நம்பிக்கையான ஒரு மாணவனாக ஆகிறான். அவ்வீட்டிலேயே இருக்கும் இந்துவின் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அம்மாவின் பிம்பத்திற்கு முன் எதுவும் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் அப்புவுக்கு அம்மாவின் தகாத உறவைக் கண்டு மீதும் வேத பாடசாலையில் தங்கி வேதம் சொல்லிக்கொடுக்கக் கூடியவனாக தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
இந்நாவல் படித்த பிறகு அது எழுப்பும் கேள்விகளின் வழியாகத்தான் இந்நாவலைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அப்புவின் அம்மா, அலங்காரம், ஏன் அவ்வாறு சிவசுவிடம் ஒரு உறவை வைத்துக்கொண்டிருக்கிறாள்? எது அவளை அப்படிச் செய்யத் தோன்றியது?
இந்த கேள்விக்கு இந்நாவலில் நேரடியான ஒரு பதிலைக் கண்டடைய முடியாது. அவளுடைய கணவன் தண்டாயுதபாணி எந்த குறையும் அற்றவனாக, அவளின் மீது அன்பும் மரியாதையாகவும் தான் இருக்கிறான். வாழ்க்கையில் நடக்கும் சில விநோதங்களில் ஒன்றாகவோ முரணின் ஒன்றாகவோ எடுத்துக்கொள்ளவேண்டும் போல. இவைபோல சமுதாயத்தில் நடக்காமல் இல்லை. ஆனால் அதற்கு ஏதோ ஒரு காரணத்தைப் பாதிக்கப்பட்டவர் சொல்வார் அல்லது சமுதாயமே அதனைக் கண்டுபிடித்து அல்லது அனுமானம் செய்து அதை அதனில் பொருத்திக் கொள்ளும். இக்கதையில் அது போல ஒன்றை ஊகம் செய்துகொள்ள முடியாது. எதோ ஒன்று அலங்காரத்துக்கு சிவசுவிடம் பிடித்துப் போய்விட்டது. அதற்கு வேறு எந்த காரணமும் இல்லாமல் இருக்கலாம். ஒன்றைப் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கரணம் இருக்க வேண்டுமா என்ன? அப்படி இருந்தாலும் அது நாமே கற்பனை செய்துகொள்வதுதான். ஒரு நல்ல மணத்தை நுகர்ந்தவுடன் ஏன் அது பிடிக்கிறது? அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் சொல்லிவிட முடியுமா? வேறு ஒரு பொருளை நினைவுபடுத்துதலைச் சொல்லலாம் அவ்வளவுதான். அப்படித்தான் இங்கு அலங்காரத்துக்கு சிவசுவை பிடித்துவிட்டதை எடுத்துக்கொள்ளவேண்டும். அவள் மற்ற யாரையும் குறை சொல்லவில்லை. தான் செய்வது மற்றவர்களின் பார்வையில் அல்லது சமுதாயம் வகுத்து வைத்திருக்கிற ஒரு நியதியின் கீழ் வரவில்லை என்பதை அறிந்தவளாகத் தான் இருக்கிறாள்.ஏதோ ஒரு வகையில் அதனைக் கண்டுகொண்டவளாக தன மகனை வேதம் படிக்க வைக்கிறாள். தான் செய்ததுக்காக வேதம் படித்து எல்லாவற்றையும் அறிந்து கடந்த ரிஷி போல ஆன தன் மகன் காலில் விழுந்து எரிந்து போய்விடுமென்று என்று தான் நினைக்கிறாள். ஆனால் தன மகன் அம்மா மீது அளவற்ற அன்புடன் இருக்கும் பிள்ளையாகவே இருந்து அம்மாவின் தவற்றைக் கண்டுணர்ந்து வருத்தப்படும் மற்ற சாதாரண மனிதர்கள் போல அல்லது மற்ற பிள்ளைகள் போலவே இருக்கிறது அவளுக்கு வருத்தமாக இருக்கிறது. அதனால் தான் இறுதியில் அவள் காசிக்குச் செல்ல முடிவெடுத்துச் செல்கிறாள்.
தன் மனைவி அலங்காரம் தவறாக நடப்பது தெரிந்தும் அவள் கணவனான தண்டாயுதபாணி எப்பிடி அவளுடன் வாழ முடிகிறது? எது அவரை அவளுடனே இருக்க வைக்கிறது? அவள் மீது இன்றும் அதே மரியாதையை வைத்திருக்க முடிகிறது?
வேத பாடல்கள் தெரிந்து அதன் அர்த்தமும் சொல்லக்கூடிய தண்டாயுதபாணிக்கு தன் மனைவி மீது வருத்தம் இல்லாமல் இல்லை. அவள் மீது அன்பு இருந்தாலும் ஒரு காலத்தில் அவள் மீது இருந்த மரியாதை இப்போதில்லை. அவர் தன் பழைய நினைவிலேயே தேக்கி வைத்துக்கொண்ட தன் மனைவி அலங்காரத்துடன் அவர் இன்றும் வாழ்கிறார். தன் மகனிடம் பேசும்போது வீடென்று ஒன்று இருக்கிறது, அதனால் வந்து வாழ்ந்து தானே ஆகவேண்டும் என்றும், நாம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று கூறுவது அவர் வேதங்கள் மூலம் அந்த நிலையை அடைந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். அவர் நினைத்திருந்தால் சிவசுவை இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் இருப்பது அவர் மனைவியே விரும்பி செய்யும் காரியம் என்பதால் அவளும் அவருடன் வீட்டை விட்டுச் செல்ல நேரிடலாம் என்று நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது. தன் மகனிடம் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி வந்து விட வேண்டும் என்றும் இல்லையென்றால் அலங்காரம் பறந்து போய்விடுவாள் என்று கூறுகிறார். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது தன் மனைவி இந்த வீட்டில் இருப்பதற்கு ஒரே கரணம் அப்பு வேதம் படித்து விட்டு ஒரு நாள் வந்து அவளுக்கு விமோசனம் கொடுப்பான் என்ற நம்பிக்கையில் தான் அவள் இந்த வீட்டில் இருக்கிறாள் என்று. பெரிய ஆளுமைகளையெல்லாம் அவர் வேத வகுப்பில் கட்டுப்படுத்தினால் அவர் மனைவியின் ஆளுமையில் அவர் கட்டுப்பட்டுத் தான் இருக்கிறார். ஜாதகத்தின் மேலெல்லாம் நம்பிக்கை இழந்து போனது கூட யதார்த்தத்தில் அது ஒரு பலனையும் கொடுக்கப்போவதில்லை என்று அவர் உணர்ந்திருக்கிறார் போல. யார் என்ன சொன்னாலும் குடும்பம் என்ற அமைப்பு போய்விடக்கூடாது என்று நினைப்பில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
அலங்காரத்தில் பிள்ளைகள் ஏன் அம்மாவிடம் இதைப் பற்றி எதிர்த்துக் கேட்பதில்லை?
அலங்காரத்தின் ஆளுமையும் அவளிடத்தில் மேல் அவர்கள் கொண்டிருந்த அன்பும் அவளை எதிர்த்து அவர்களால் ஒன்றும் கேட்கமுடியவில்லை. மிக வெளிப்படையான ஒன்றைக் கேட்கும்போது உறவுகளின் மீது அது ஏற்படுத்தும் விளைவு எண்ணித் தயங்குகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அப்புவின் பரிதவிப்பு
அப்புவுக்கு பிடித்தது அக்கிராமத்தில் இருக்கும் காவிரியாறு, படித்துறையில் இருக்கும் கோவில் விதவிதமான பறவைகள், வேதம், வேத பாடசாலை, இந்து மற்றும் பவானியம்மாள். பதினாறு வருடங்கள் அங்கே தங்கிப் படித்த அவனுக்கு அது தான் அவனுடைய இடம் என்று உள்ளூர தெரிகிறது. அதை விட்டு நிரந்தரமாகப் போக மனமில்லை. ஆனால் அவனது அம்மா அலங்காரம் இவற்றை விட மேலான இடத்தில் அவனுள் இருக்கிறாள். அம்மாவின் ஆஜாகுபாவனை அவளின் தோற்றமும் அழகும் அவனில் எப்போதும் உறைகிறது. அப்புவின் அம்மாவுக்கு எல்லாம் தெரியும் . அவன் அப்பா கூட அம்மா சொல்வதைத்தான் கேட்கிறார். அம்மாவைப் பார்க்க வேண்டும், அம்மா அவனை ஆசையாக வந்து விசாரிக்க வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் இருக்கிறது. பதினாறு வருடத்தில் மிகக் குறைவாகவே அவன் அம்மாவைப் பார்த்திருக்கிறான். ஆனால் வேதம் படித்த அவனுக்கும் பரமாத்மாவின் நினைவிட அம்மாவின் நினைவே அதிகமாக இருக்கிறது. அம்மாவே அவனுக்குப் பரமாத்மா. அப்பு சிறுவயதிலேயே வீட்டை விட்டு வேத பாடசாலைக்கு வந்து விட்டான். அதுவே அவனுக்கு அவன் அம்மா மீதான ஏக்கத்தை அதிகரித்துவிட்டிருக்கிறது. வேதங்களை கற்றுத் தேர்ந்து பல பரிசுகள் வாங்கி இருந்தாலும் அம்மாவின் தொலைவு அவள் மீதான அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவனுக்கு அவன் அம்மாவின் கம்பீரமும் அழகும் அவனை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. அம்மாவின் முகத்தை நினைக்கும் போதெல்லாம் அவன் நிறைவுடன் உடல் கிளுகிளுத்து விடுகிறது. அவனுக்கே அது ஆசிரியமாக இருக்கிறது. வேதத்தைப் போல அவனுக்கு அவன் அம்மா மிக முக்கியம் என்று நம்புகிறான். வேதம் எங்கம்மா மாதிரி புடம் போட்ட ஒரு தங்கம் என்கிறான். அம்மாவைப் பார்ப்பதற்காக தனக்குப் பிடித்த இந்துவையும், மதிக்கும் பவானியம்மாளையும் விட்டு மிகுந்த ஆவலுடன் வீட்டுக்குச் செல்லும் அவனுக்கு அம்மாவின் தகாத உறவைக் கண்டும் கேட்டும் மனம் குழம்பு நிற்கிறான். அவனுக்கு மட்டுமே தெரியாத ஒன்றாக அவ்வீட்டில் மற்ற அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்ததில் அவன் தனித்து விடப்பட்ட ஒருவனாக அவ்வீட்டில் இருக்கிறான். இதைப் பற்றித் தெரிந்தும் அவன் அப்பா எப்படி அவ்வீட்டில் இருக்கமுடிகிறது என்று அவர் மீதும் அவனுக்கும் கடுங்கோபம் வருகிறது.
இந்துவின் பங்கு என்ன?
இந்நாவலின் தொடக்கம் இந்துவில் ஆரம்பித்து அவளிடமே வந்து முடிவடைகிறது. ஒரு வகையில் அப்புவுக்கு மனதில் ஒரு சலனத்தைத் தொடங்கிவைத்து இறுதியில் அவளே அதை தெளிவுபடுத்தி வைக்கிறாள். இந்து என்ற கதாபாத்திரத்திற்கு அனைத்தும் தெரிகிறது. சாதாரணமான வீட்டுப் பெண்கள் போலச் சமைக்கிறாள், நெல் அவியவைக்கிறாள், புடவை துணிகளைக் காயவைக்கிறாள், உளுந்து உடைக்கிறாள், காவேரிக்குச் சென்று குடத்தில் நீர் எடுத்து வருகிறாள், மிகத் தெளிவான அர்த்தத்துடன் பேசுகிறாள். இது மட்டுமில்லாமல், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும், அப்புவை மறுதிருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அவளே அவனிடம் அதைத் தெரிவிக்கிறாள். அது மரபான ஒன்றை மீறுவது என்பது என்று தெரிந்திருந்தாலும் அதற்காக அவள் வருத்தப்படவில்லை.
இந்நாவலில் அன்றைய சூழ்நிலையிலிருந்த மரபான சமுதாய விதிகளை மீறி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலங்காரம் மூன்று குழந்தைகள் பெற்ற பின்பு எந்த வித நெருக்கடியிலும் இல்லாத அவள் வாழ்க்கையில் சட்டென சிவசுவிடம் கொள்ளும் தொடர்பு. சிறுவயதில் முதல் திருமணம் நடந்து அந்த கணவன் இறந்த பிறகு இந்து அவளுக்குப் பிடித்த அப்புவை காதலித்து அவனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவது. வேதங்களைப் படித்து வாழ்க்கையின் யதார்த்தத்துடன் வாழும் அப்புவையும் அவனது அப்பா தண்டாயுதபாணியும் என கதாபாத்திரங்கள் வழக்கமான ஒன்றிலிருந்து மீறியே செல்கிறார்கள். திரு. தி. ஜானகிராமனுக்கு பெண்களின் உணர்வுகளை நுட்பமாக உணர்ந்து எழுத்துக்கூடியவராக இருக்கிறார். இந்நாவலில் வரும் கதையில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment