குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் - ரசனையுரை

குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் - Zero degree/எழுத்து  பிரசுரம் | panuval.com

சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தற்செயலாக இந்த கதையைப் பற்றிக் குறிப்பிட்டார். பின்பு விஷ்ணுபுரம் இலக்கிய விருதுக்குத் திரு. யுவன் அவர்கள் தேர்வான போது மீண்டும் இக்கதையைப் பற்றிய குறிப்புகளைப் படித்தேன். இன்று இந்நாவலைப் படித்து விட்டு எண்ணிப்பார்க்கும்போது அவைகள் தற்செயல்கள் அல்லாமல் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. 

பல சம்பவங்களின் தொகுப்பாகச் செல்லும் இந்நாவலில் ஊடே மனிதர்கள் அற்புதத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அது எழுப்பும் வாழ்க்கையின் மீதான கேள்வியை, தற்செயல்களில் கண்ணுக்குத் தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் நூலிழையின் சாத்திய கூறுகளைக் காட்டுகிறது.

திருமணமாகி வெகு நாட்களாகியும்  பழனிக்கும் சிகப்புக்கும் குழந்தை பிறக்காமலிருக்கிறது. சிகப்பி இறை மீதான நம்பிக்கையும் கடுமையான சடங்குகளைப் பின்பற்றுவதன் மூலம் அற்புதம் ஒன்று நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். புத்தகங்கள் கொடுத்த அறிவில் பழனி யதார்த்தமான ஒரு உலகைக் காண்பவனாகவும் சடங்குகளின் மீது புகார் என்று ஏதும் இல்லை என்றாலும்  வாழ்க்கை தனக்கு மட்டுமே கொடுக்கும் இழப்புகளை எண்ணி அது எழுப்பும் கேள்விகளுக்கு விடையற்று அதைக் காண முயல்பவனாகவும் இருக்கிறான். வறுமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்த ஆலஷ்யம்
சுதந்திர போராட்டத்தின் மீது எளிய மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் வியக்கும் அதே நேரம், வெள்ளையர்கள் கொடுத்த காவல் துறை பதவி, அந்த எளிய மனிதர்கள் மீது கட்டற்ற வன்முறையைச் செலுத்தக் கொடுக்கும் சுதந்திரத்தில் தன்னை இழந்தவனாக வேலையை விட்டு தன் கல்லூரி தோழன் முத்துச்சாமியின் மடத்தில் சேர்ந்துகொள்கிறான். முத்துச்சாமியின் நம்பிக்கையையும் வாழ்க்கையைப் பற்றிய அவரின் பார்வைகளையும் கற்றுக்கொள்கிறான். முத்துச்சாமியின் சமாதிக்குப் பிறகு அவர் செய்த அற்புதங்களைப் பலரிடம் கேட்டறிந்து குள்ள சித்தன் சரித்திரம் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதுகிறான். பின்பு இருபது வருடங்கள் கழித்து அப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்செயலாகப் பழனியிடம் கிடைத்துப் படிக்கிறான். 

பெரும்பாலான நவீன இலக்கிய நாவலில் வெளிப்படும் மனிதனின் கீழ்மையையோ மேன்மையையோ பற்றி இந்நாவல் கையாளாமல் எளிய மனிதர்களிடையே இருக்கும் அற்புதம் ஒன்று நிகழும் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. அந்த அற்புதம் நிகழும் நிகழ்வுகளைத் தரவுகள் கொண்டு நிரூபிக்கவுமில்லை அல்லது அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து விலக்கவுமில்லை. படிக்கும் வாசகர்களுக்கு இக்கதையில் நிகழ்வதாகச்  சொல்லப்படும் சில மர்மமான நிகழ்வுகள் (நடக்கமுடியாமல் இருக்கும் சிறுவனை நடக்க வைப்பது,   குழந்தை பிறப்பதை யாருக்கும் தெரியாதவாறு மறைத்து, பிறந்த குழந்தை வேறு ஒருவரின் வீட்டின் வாசலில் இருப்பது) வெறும் சுவாரஸ்யத்துக்காகச் சொல்லப்பட்டது என்று முற்றிலும் கடந்துபோக முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது, இன்றுவரை எனக்கு எதுவும் ஏற்படவில்லை என்பதால் அந்த நம்பிக்கையை என் மனம் இதுவரை ஏற்கவில்லை என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் நடக்கும் தற்செயல்கள் என்று நாம் கண்டுகொள்ளாமல் அல்லது ஆராயாமல் விட்டுச்செல்லும் நிகழ்வுகள் அனைத்தும் வெறும் தற்செயல்களாக இல்லாமல் இருக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்ற ஒரு பொறியை இக்கதை ஏற்படுத்துகிறது. இக்கதையில் சொல்லப்பட்டது போல "தனித்தனி சொட்டுகள் ஒன்றுகூடி தரையாவது போலப் பல்லாயிரம் உதிரி சம்பவங்களின் தொகுப்பதுதான் வாழ்க்கை" என்ற வரி நம்மைச் சுற்றி நடக்கும் அல்லது அசையும் ஒவ்வொன்றும் யாரோ அல்லது ஏதோ ஒன்றின் ஆதி உந்துதலாகத்தான் இருக்கும் போல. நம்மை வந்து அடையும் போது அது ஒரு தற்செயல். அந்த தற்செயலின் துல்லியத்தைத்தான் என்னை இக்கதை மேலும் சிந்திக்கவைக்கிறது. இலக்கியம் அல்லது வேறு ஒரு கலை அறிந்தவர்களுக்கு அவைகள் வாழ்க்கையின் மீதான புரிதலை ஏற்படுத்திக் கொடுப்பதுபோல, எந்த கலையையும் அறிந்திராத அன்றாட வாழ்க்கைக்குப் பொருள் ஈட்டுவதற்கு அல்லல்படும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் மீதான ஒரு பிடிப்பை இந்த அற்புதங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையே ஏற்படுத்துகிறது. இது இரண்டுமே இல்லாத மனிதர்களுக்குப் பழனி போல வாழ்க்கையின் மீது வெறும் கேள்விகளே எஞ்சி நிற்கிறது. முன் ஜென்மம், ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு ஆன்மா பாய்வது என்று மனதிற்குப் பிடிபடாத சில நிகழ்வுகளை விவரிக்கும் இக்கதையில் 

திரு. யுவன் அவர்களின் எழுத்துக்களை முதன் முறையாகப் படிக்கிறேன். நிகழ்வுகழ்வுகளில் கவிதையையும் தத்துவத்தையும் ஒரு சேர கண்டுகொள்ளும் மனம் படைத்தவர் போலத் தோன்றியது. எழுதப்படாத மையங்களிலிருந்து ஒதுங்கிய ஒரு பேசுபொருளைக் கொண்ட இந்நாவலை இலக்கிய நயத்துடன் எழுதுவதற்கு ஒரு மனநிலை வேண்டும். அது யுவனுக்கு மிக இயல்பாகவே இருக்கும் என அவருடைய சில காணொளிகளைக் கண்டபோது புரிந்தது. கொஞ்சம் ஆழமாக எழுதினால் ஆன்மிக வாசமும், மேலோட்டமாக எழுதினால் இந்நாவல் கொடுக்கும் அல்லது எழுப்பும் வாழ்க்கையின் மீதான கேள்விகள் அற்றும் போய்விடக் கூடிய சாத்திய கூறுகள் கொண்ட இந்நாவலை மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார். 
   
அவர் எழுத்தில் நான் ரசித்த சில வரிகள், கதைக்குத் தேவையான இடங்களில் உறுத்தாத வகையில் மிக இயல்பாக அழகாக வந்தமர்ந்திருக்கிறது. 

இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில் மீட்டெடுக்கிறது பொழுது

கூடு நோக்கித் திரும்பும் ஒற்றை பறவை தன் தனிமையிலிருந்து சிந்திச் செல்லும் ஒரு சொட்டு எங்கள் தலையில் வீழ்கிறது.  

எறும்பு கூட்டமாட்டம் வார்த்தைகள் மொய்ச்சுக் கிடக்கிற இலந்தை பலமாயிட்டேனேன்னு தோணுச்சு



Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

உணரும் தருணம்

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்