83

பஞ்சநாதன் அந்த மாதிரி ஒரு பந்தை ரமேஷிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் உறைந்து பின்பு சுதாரித்து பின்னால் திரும்பிப் பார்த்தான். மண்ணில் புதைந்திருந்த மூன்று ஸ்டிக்குகளில் ஒன்று பந்து பட்டு கழுத்தைத் திருப்பிக்கொண்டிருந்தது. தன்னை "டேவிட் பூன்" என்று சொல்லிக்கொள்ளும் பஞ்சநாதன் ரமேஷ் போட்ட அந்த பந்தில் அவுட் ஆனது எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருக்க நாங்கள் கை தட்டி பஞ்சநாதனைக் கிண்டல் செய்தோம். ஆனந்த் ஓடிச்சென்று ரமேஷை கட்டிப் பிடித்துக்கொண்டான். ரைஸ் மில் சந்தின் அருகில் பவுண்டரிக்கு செல்வதைத் தடுக்க நின்றுகொண்டிருந்த நான் ரமேஷிடம் ஓடி வந்து அவன் கையை தட்டினேன். வாசலிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த்தின் அம்மா "பஞ்சநாதா நீ 'டேவிட் பூன்' இல்ல 'டேவிட் கௌர்'. உலக கோப்பை போட்டியில அமர்நாத் போட்ட ஒரு பந்துல டேவிட் கௌரா இப்படி தான் அவுட் ஆனான். யாருமே எதிர்ப்பார்க்கல. அமர்நாத்கூட" என்று சொல்லி பலமாகச் சிரித்தாள். மாமி கிரிக்கெட் வெறியர். எங்களுடைய தெரு கிரிக்கெட்டிற்கு அவர்தான் அம்பயர். நான் 83 -ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டைப் பார்த்ததில்லை. ஆனால், எண்பதுகளின் இறுதியில் கிரிக்கெட் பார்க்க ஆனந்த் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் மாமி உலகக்கோப்பை பற்றிய நிறையக் கதைகள் சொல்லுவார். அப்பொழுது ஆனந்தை பார்த்து நானும் வெங்சர்க்கரின் தீவிர ரசிகனாக இருந்தேன். மாமிக்கு எப்போதும் கபில்தேவ் தான். கபில் பந்து போட வரும்போதெல்லாம் கரண்டியுடன் வெளியே வந்து "கபில் இந்த ஓவர்ல ஒரு விக்கெட் எடுக்குற" என்று சொல்லிவிட்டு செல்வார். பெரும்பாலும் மாமி சொல்வதை கபில் கேட்க மாட்டார். அவைகள் சிக்சருக்கு செல்லும்போது, ஆனந்து மாமியைக் கிண்டல் செய்வான். மாமி, "உங்களுக்கு என்னடா தெரியும், கபில் மட்டும் இல்லனா இந்தியா உலகக்கோப்பை விண் பண்ணியிருக்காது" என்று சொல்லும்போது எனக்கு அவ்வளவாக அது பெரிய விஷயமாக தெரியவில்லை. வருடங்கள் பல கடந்து இப்போது 83 திரைப்படத்தைப் பார்த்தபோது தான் மாமி சொன்னது புரிகிறது. கபிலின் பெருமையோ அல்லது நரம்பு புடைக்க வைக்கும் இந்தியாவின் எழுச்சியையோ வைத்து ஜல்லியடிக்காமல் உலகக்கோப்பையில் கபிலின் சிறப்பான பங்கும், அன்று நடந்த சில நிகழ்வுகளையும் வைத்து மேலோட்டமாக சொல்லிச் சென்றதால் படம் போரடிக்காமல் செல்கிறது. படத்தில் ஒரு காட்சியில் அனைவரும் அவர்கள் இடத்தை விட்டு நகராமல் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தபோது, மாமி ஒரு முறை அவர்கள் வீட்டில் யாரையும் நகர விடாமல் ஏதோ ஒரு மேட்சில் எங்களையும் உட்கார வைத்தார்கள். பின்பு ஒரு முறை சாமி படத்திலிருந்து பூ ஒன்று விழுந்தவுடன், "பூ விழுந்துருக்கு இப்ப இவன் அவுட்" என்று சொன்னவுடன் சரியாக அவுட் விழ, பின்பு நாங்கள் டீவியை பார்க்காமல் சாமி படத்தையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தோம். படத்தில் ஒரு காட்சியில் அமர்நாத் அம்பயரிடம் அவுட் கேட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் அவுட் கேட்பது போலக் காட்சிகள் வந்து கடைசியில் அம்பயர் அவுட் தரும் காட்சி வரும். நான் அந்த கோடிக்கணக்கான மக்களில் அன்று மாமியும் எழுந்து அம்பயரிடம் அவுட் கேட்டிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது 83 படத்தில் வரும் காட்சிகளை மாமியிடமும், ஆனந்த்திடமும் சொல்லவேண்டும். அதற்கு அவர்கள் இன்று உயிரோடு இருக்க வேண்டும் என்று இல்லை. அந்த தெருவைக் கடந்து சொல்லும்போது ஆனந்த் வெங்சர்கார் போலப் பேட்டை வைத்துக்கொண்டும், மாமி படிக்கட்டில் அமர்ந்துகொண்டும் அங்குதான் இருப்பார்கள்.

Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

உணரும் தருணம்

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்