கல்பொரு சிறுநுரை

 திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து

“கல்பொரு சிறுநுரை போல.." என்ற வரியின் அர்த்தமும், அதன் காட்சி வடிவமும் தெரிந்தவுடன் ஓயாமல் மனது இந்த வரியை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ஒரு பெரும் ஆனந்தம் , பாறையின் மேல் மோதிய நுரையைப் போல மெல்ல வழிந்து ஒன்றுமில்லாமல் ஆவது என்ற கற்பனையின் ஊடாக மனம் ஏனோ கிருபா அண்ணனை இழுத்துவந்தது. எனக்கு கிருபா அண்ணன், மஞ்சரி அக்காவின் மூலமாகத் தான் தெரியும். ஜாங்கிரி செய்வதற்குக் கரண்டி எடுத்து வர மறந்த 'சமையல்' துரை மாமா, அவர் வீட்டுக்குச் சென்று வாங்கி வர அனுப்பியபோதுதான் மஞ்சரி அக்காவை முதலில் பார்த்தேன். மனம் முழுவதும் மாமா போட்டு வைத்திருந்த மைசூர் பாக்கையே நினைத்திருந்த பொழுதில், சட்டெனக் கதவு திறந்து மஞ்சரி அக்கா காட்சியளித்தாள். என் மனம் வார இதழ்களில் வரும் நடிகைகளால் நிறைந்திருந்த வயது அது. மஞ்சரி அக்கா எந்த சுடு சொல்லும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் வெளியேற்றினாள். ஜாங்கிரி கரண்டியைக் கொண்டுவந்து கொடுத்த அவளிடம், ஜாங்கிரி சுடுவதற்குத் தேவையான எந்த சிறப்பம்சமும் அந்த கரண்டியில் இல்லாத அதிர்ச்சியில் அவள் முகத்தை நான் பார்க்க, "இதுதான். கரண்டியும் ஜாங்கிரி மாதிரியே இருக்கும்னு நினைச்சியா?" என்று சொல்லிச் சிரித்தாள். நானும் சிரித்துக்கொண்டே வெளியே செல்ல முற்படும் தருணம், என்னைச் சற்று காத்திருக்கச் சொல்லி ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து எதிர் வீட்டில் இருப்பவரிடம் கொடுக்கச் சொன்னாள். நான் எதிரே எந்த வீட்டில் என்று சற்று குழம்பி நிற்க, அவள், "அந்த மல்லிகை பூ செடி இருக்குல்ல", என்று கை நீட்டிக் காட்டினாள். நான் வெளியே சென்று அந்த வீட்டை நெருங்க நெருங்க அங்கிருந்த அடர்ந்து பரந்திருந்த அந்த மல்லிகை செடி உருப்பெறுகிக்கொண்டே இருந்தது. அருகில் செல்லும் தருணம் தோறும் மல்லிகை செடியின் வாசனை என்னுள் படர்ந்து, ஒரு சீரான இடைவெளியில் எங்கும் நிறைந்து மலர்ந்திருந்த மல்லிகையில் அந்த வீடே பெரும் சிரிப்பின் ஒரு புள்ளியில் உறைந்திருப்பது போல இருந்தது. அந்த சிரிப்பின் சிறு தெறிப்பு போல ஒரு புன்னகையுடன் கிருபா அண்ணன் அங்கு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
பின்பு, மஞ்சரி அக்காவிடமே எனக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்க அப்பா சேர்த்துவிட்டது காலத்தின் கட்டாயம் போல. அதற்குப் பின்பு பலமுறை கிருபா அண்ணனிடம் எதையாவது கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தேன். அவைகள் பெரும்பாலும் மஞ்சரி அக்காவிற்கும், கிருபா அண்ணனுக்கும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ரகசிய மொழிகளும், குறியீடுகளும் உள்ளடக்கியவை. ஒவ்வொரு முறையும் கிருபா அண்ணன் அவரின் அந்த புன்னகையை மறக்காமல் கொடுத்து அனுப்புவார். மல்லிகை செடியில் பூக்கள் மேலும் மேலும் அடர்ந்து பூத்துக்கொண்டிருந்த காலம் அது.
சட்டென ஏதோ ஒரு நாளில் மஞ்சரி அக்கா வேறு ஊருக்கு அனுப்பப்பட்டாள். அன்றுடன் என் கணக்கும் முடிக்கப்பட்டது. அவள் ஊருக்கு செல்லும் முதல் நாள், என்னிடம் கொடுக்கச் சொன்ன அந்த கடிதம் என் கால்சட்டையிலேயே தங்கி விட்டதை, சில நாட்கள் கழித்துத் தான் கண்டுகொண்டேன். அது படிக்க முடியாத ஒரு நிலையிலிருந்தது, அம்மா எவ்வளவு பலமாக அடித்துத் துவைத்திருக்கிறாள் என்பதைக் காட்டியது. அத்துடன் மஞ்சரி அக்காவைப் பல வருடங்கள் கழித்து, அவள் குழந்தையுடன் கல்யாண நிகழ்வு ஒன்றில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவள் நிகழ் காலங்களில் வாழ்ந்துகொண்டிருந்தாள். வரும் வழியில் கிருபா அண்ணனின் வீட்டைக் கடந்து செல்கையில் காய்ந்த உயிரற்ற நிலையிலிருந்த அந்த மல்லிகை செடி தன் சிரிப்பை முற்றிலும் இழந்திருந்தது.

Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

உணரும் தருணம்

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்