காடு இட்டுச் செல்லும் பாதை
அப்போது விகடனில் தொடராக வந்துகொண்டிருந்த சங்க சித்திரங்கள் படித்து, அதனை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்த காலங்கள். வார நாட்களில் மேன்ஷனிலிருந்த அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு, யாரோ துணி துவைக்கும் சத்தத்தையும், ஒளிரும் மின்சாரக் கம்பியில் அமர்ந்து கரைந்து செல்லும் காகத்தின் குரலையும் கேட்டுத் தாளமுடியாமல் இருந்த நாட்கள். அன்றைய மன நிலையில் யாரேனும் காடு பற்றிக் கேட்டிருந்தால், அவை கரிய இருட்டில் மரங்கள் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ஒரு பாதை மட்டுமாகவே இருந்திருக்கக்கூடும். ஆழ்கிணறுக்குள் செல்லும் ஒரு சரடு போல. அதன் மறு முனையைக் கற்பனை செய்ய முயலும் தோறும், மூச்சடைத்து நீருக்குள்ளிருந்து வெளிவருவதுபோல இருக்கும். எதிர்கால பயம், தனிமை, பதற்றம் என மனதுக்குள் பொங்கி வந்த வண்ணம் இருந்த ஒன்றின் படிமமாகவே காட்டை கற்பனை செய்திருப்பேன். அப்படி இருந்த நாட்களின் ஒன்றில் தான் காடு நாவல் வெளிவந்தது. கிரிதரனை மிக எளிதாகவே அடையாளம் கொண்டுகொள்ள முடிந்தது. அவன் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும்போதும் என் அகமும் அவனின் கைபிடித்துக் கொண்டு இருளுக்குள் நுழைந்தது. அவன் காட்டில் கண்ட பூக்களைய...