Posts

Showing posts from December, 2023
  பைதல் பாகன்       பெருஞ்சோறு பயந்து ,  பல்யாண்டு புரந்த பெருங்களிறு இழந்த பைதற் பாகன்  அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை , வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக் , கலங்கினேன் அல்லனோ யானே ,  பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே ?     யானை   ஏனோ எந்த வயதிலும் அலுப்புத்தட்டுவதேயில்லை. அதிலும் யானையின் உடலசைவுகள் ஏனோ மனதுக்குள் குதூகலம் ஒன்றைச் சட்டென ஏற்படுத்திவிடுகிறது. தினசரி கவலைகளில் திரிந்த மனம் அனைத்தையும் உதறி ஒரு புள்ளியில் குவிந்து இலகுவாகிவிடுகிறது.   தெருவில் யானை செல்லும்போது உறைந்து சலனமற்று நிற்பவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோ அந்த பிரம்மாண்டத்தினுள் இருக்கும் சிறு குழந்தைத்தனம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக்   கடந்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது போலும். கோவில்கள் நிறைந்த எங்களூரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும்.பெரும்பாலும் பாகனுக்காக இரந்து கொண்டிருக்கும் அதனை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துசெல்ல முடியாது. சிறிது நேரம்...
  கேட்குநர் உளர்கொல் ?   சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறையரு நோயொடு  புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து தூதை தூற்றுங் கூதிர் யாமத்து தானுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. (வெண்கொற்றனா ர் ,  குறுந்தொகை)     செவிலியர் ஆஞ்செலா இரத்தம் எடுப்பதற்குத் தேவையான ஊசியைத் தயார்ப்படுத்தும் இடைவெளியில் ,  மார்ஷா தன் கையை இலகுவாக்கிக் கொண்டு ,   கண் மூடி முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் காத்திருந்தாள். ஊசியின் கூர்மை அவள் தோளை ஊடுருவிச் செல்லும் அந்த கண நேரத்தில் வழக்கம்போல இன்றும்  மார்ஷாவுக்கு ,  இராணுவச் சீருடை அணிந்து ,  முகமெங்கும் புன்னகை படர்ந்து இருக்கும் தன் மகள் சாரவின் புகைப்படம் நினைவுக்கு வந்து சென்றது. சாரா ,  மார்ஷாவின் ஒரே மகள். அமெரிக்க இராணுவத்தில் மருத்துவராக வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும்போது விபத்து ஒன்றில் ஒரு வருடத்திற்கு முன் இறந்துபோனாள். மார்ஷாவின் எண்ணங்கள் இரவும் பகலும் சாரவின் நினைவிலேயே இருந்தன.   ஆஞ்செலா இரத்தத்தைப் பல வண்ண குப்பிகளில் செலுத்தி...