அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை
அஞ்சலையை நான் பேருந்தில் பயணம் செய்த போது பார்த்திருக்கிறேன். அன்று அவள் சன்னலோரம் தவிப்பாய் அமர்ந்திருந்தாள். எங்கள் வயலில் அறுப்பு நாள் ஒன்றின் போது பார்த்திருக்கிறேன். தலையில் உள்பாவாடை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஆண் சட்டை அணிந்து களத்தில் நெல் அடித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து எங்கள் ஊருக்குப் பயணம் செய்யும் வழியில் முந்திரி மரங்கள் நிறைந்த விருத்தாசலத்தைக் கடக்கும்போது ஒருமுறை பார்த்திருக்கிறேன். சாலையிலிருந்த வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது மஞ்சளும், சிவப்புமாயிருந்த முந்திரிப்பழத்தை இரு கைகளிலும் விரல்களுக்கிடையே லாவகமா நிறுத்தி எங்களை வாங்கச் சொல்லி கண்ணாடியில் முகம் பதித்துச் சென்றாள். சினிமா கொட்டகையில் சீட்டு வாங்கிவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கக் காத்திருக்கும் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்த நரிக்குறவர்கள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு பொங்கி வரும் சிரிப்பை அருகிலிருந்தவனின் தோளில் முகம் புதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். இப்படி நிறைய இடங்களில் அஞ்சலயை கண் சிமிட்டும் ஒரு சில மணித்துளிகளில் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். இந்நாவலில் வாழ்ந்திருக்கும்...